Tuesday, July 29, 2014

வாலிபனின் ஜெபம்–11: வெறுமையான என்னை…

Repentance

வெறுமையான என்னை வெறுத்துத் தள்ளாதேயும்
பாவியான என்னைப் பிரித்து விடாதேயும்
அடிமையான என்னை அலட்சியப்படுத்தாதேயும்
சாரம்போன என்னை சோர்வுரச்செய்யாதேயும்

வெறுத்துத் தள்ளவா என்னை வெறுமையாக்கினேன்?
பிரித்து விடவா என்னை பலியாக்கினேன்?
அலட்சியப்படுத்தவா அந்தக் கொடூரக் கோளம் அடைந்தேன்?
சோர்வுரச்செய்யவா நான் சிலுவையைச் சுமந்தேன்?

உம்மை விட்டு நான் தூரம்போனவன்
அவலட்சனங்களில் நான் அகப்பட்டவன்
உம் அன்பிற்கு நான் தகுதியற்றவன்
ஆண்டவரே உமக்குத் துரோகம் செய்தவன்

உன்னை எனதாக்கவே பரம்மிரங்கி வந்தேன்
உன்னை விடுவிக்கவே நான் சிறைப்பட்டேன்
உன்னை நீதிமானாக்கவே என் ஜீவன் ஈன்றேன்
உன்னை மாற்றவே நான் மாண்டு உயிர்த்தெழுந்தேன்

சிலுவையின் தியாகத்தைத் தியானித்திடுவேனே
சிந்தின திருஇரத்தத்தை மறந்திடேனே
சீர்கெட்ட வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்பேனே
சிறந்த வாழ்வு வாழச் சிலுவையன்டை வருவேனே

பெற்ற மன்னிப்பின் விலைக்கிரையத்தை மறந்திடாதே
பின்நிலைமை மோசமாகாதபடி இனி பாவம் செய்யாதே
பரிசுத்தாவியின் நிறைவில் தினமும் வாழ்ந்திடு
பரிசுத்தத்தையே வாஞ்சித்து பாரில் சாட்சி பகர்ந்திடு


Saturday, July 5, 2014

வாலிபனின் ஜெபம்–10: தகாதவைகளைத் தள்ளிவிட…

Push Away

தகாதவைகளைத் தள்ளிவிடக் கிருபைத் தாரும்
தந்தப் பரிசுத்தாவியை துக்கப்படுத்தாதிருக்கத் திடமனந்தாரும்

தீர்மானங்களில் நிலைத்து நிற்கப் பெலன் தாரும்
திருச்சித்தம் மாத்திரம் நிறைவேற்றும் எண்ணந்தாரும்

தமக்காய் வாழாமல் உமக்காய் வாழும் மனந்தாரும்
தீய இச்சையல்ல திருச்சித்தத்தை நாடிடும் எண்ணந்தாரும்

தீய தருணங்களை ஆவியின் பெலத்தால் மேற்கொள்ளச் செய்யும்
திருப்தியை உம்மில் மாத்திரம் தேடிட செய்திடும்

தூங்கித் தூங்கி பெலனை இழக்காமல் இருக்க உணர்வு தாரும்
தூக்கத்தைக் கலைத்து துதியோடு ஜெபத்தில் காத்திருக்க ஆர்வம் தாரும்

தினமும் உம் சமூகத்தில் தரித்திருக்கும் ஒழுக்கம் தாரும்
திரு வசனத்தைத் தியானித்துத் திடம் பெரும் வாழ்வு தாரும்

தூபமாய் என் வாழ்வு இயேசுவே உம் நறுமணம் வீசச் செய்யும்
திரியாய் தினந்தோறும் உமக்காய் எரிந்து பிரகாசிக்கச் செய்யும்